இரவின் பெருமோனத்தில் அங்கே நின்றேன்
முடிவுகளோ கிளைகளோ அற்ற பெருவெளி
நிலவும் மறந்துவிட்ட வறட்சி ததும்பிய பாலை
சத்தமின்றி பாதம்தொட்ட கானல் அலைகளில்
ஒரு துளி வெக்கை அள்ளிப் பருகினேன்.
உலகக்கண்ணீரின் உப்பெல்லாம் கொண்டிருந்தது அது
அலையோசையில் கலந்திருந்த சிரியப்பிள்ளையின் குரல்
உள்ளச்சுவற்றில் மோதி மோதி எதிரொலித்தது
ஓரமாய் மக்கிக்கிடந்தன பல குண்டுதுளைத்த மீனவப்படகுகள்
காற்றில் மீத்தேன் கலந்த கருகும் நெற்கதிரின் வீச்சம்
முடியா இரவின் துகள்களெல்லாம்
மீண்டும் மீண்டும் ஓராயிரம் அலைகள்.
திசைகள் தெரியவில்லை
அலைகளும் ஓயவில்லை
எப்படியோ பாலையின் வெப்பத்தை மடித்துச்சுருட்டி
ஊதிப்புகை சேர்த்து சிறு நெருப்பு செய்தேன்.
பற்றிக்கொண்டுப்பெருகிய ஒளிப்பிரவாகத்தில்
மடிந்த இரவோடு தொலைந்தது பாலை
பனியின் பிள்ளையாய் பூத்த
மலரின் புன்னகையோடு
மலர்க்கடல் மத்தியில்
வானவில் வண்ணங்களில்
விடிந்தது அழகிய காலை
ஏனோ புரியவில்லை
இரண்டில் எது மாயை